தொடரும் சீரற்ற வானிலை: கேகாலை மாவட்டத்தில் 6 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை
நாட்டில் தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட 6 பாடசாலைகளை இன்றைய தினம் (22) மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ருவன்வெல்ல பகுதியில் 3 பாடசாலைகளும், தெஹியோவிட்ட பகுதியில் 3 பாடசாலைகளும் மூடப்பட்டு, மாணவர்களை வீடுகளுக்கு அனுப்புமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தற்போதுள்ள காலநிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, ஏனைய பாடசாலைகளை நடத்துவதா அல்லது விடுமுறை வழங்குவதா என்பது குறித்துத் தீர்மானிக்கும் பொறுப்பு வலயத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெஹியோவிட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் எச்.எல். ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.
இதேவேளை, பலத்த மழை காரணமாக கேகாலை - அவிசாவளை வீதி தெஹியோவிட்ட பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், வீதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் தடை ஏற்பட்டுள்ளதாகவும், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

