மஸ்கெலியா தேயிலைத் தோட்டத்தில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு - மனைவி வெளிநாட்டில் பணி
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹப்புகஸ்தனைத் தோட்டத்தில், தேயிலைச் செடிகளுக்கு இடையே நபர் ஒருவர் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஹப்புகஸ்தனையைச் சேர்ந்த 43 வயதுடைய ராமலிங்கம் விஜயகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹப்புகஸ்தனைத் தோட்டத்தில், தேயிலைச் செடிகளுக்கு இடையே நபர் ஒருவர் சடலமாகக் கிடப்பது செவ்வாய்க்கிழமை (23) காலை 9.00 மணியளவில் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள், சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து தோட்ட அதிகாரிகளுக்கும், மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமாரவிற்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதில், உயிரிழந்தவர் ஹப்புகஸ்தனைத் தோட்டத்தைச் சேர்ந்த, 43 வயதுடைய ராமலிங்கம் விஜயகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
திருமணமான இவர் மூன்று குழந்தைகளின் தந்தை என்பதுடன், இவரது மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஹட்டன் நீதிமன்ற நீதவான், சடலத்தைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, ஹட்டன் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
பின்னர், பிரேதப் பரிசோதனைக்காகச் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை இடம்பெறவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமார தெரிவித்தார். இது குறித்த மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.