ஹட்டன் டிக்கோயாவில் வயதான தம்பதி படுகொலை – கொள்ளை நோக்கமே காரணமென சந்தேகம்

ஹட்டன் டிக்கோயா பகுதியில் தனியாக வாழ்ந்த 82 வயதுத் தம்பதியினர் கூரிய ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். கொள்ளைக்கு வந்தவர்களே இந்தக் கொடூரச் செயலைச் செய்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஹட்டன் டிக்கோயாவில் வயதான தம்பதி படுகொலை – கொள்ளை நோக்கமே காரணமென சந்தேகம்

ஹட்டன் டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றின் பின்புறம் தனிமையில் வாழ்ந்து வந்த 82 வயதான தம்பதியினர், கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் முன்னாள் நகை வர்த்தகரான எஸ். காளிமுத்து சத்திவேல் (82) மற்றும் அவரது மனைவி சகுந்தலாதேவி (82) ஆவர்.

இந்தத் தம்பதி முன்னதாக ஒரு நகைக் கடையை நடத்தி வந்த நிலையில், பின்னர் அதனை மூடிவிட்டு அதன் பின்புறமுள்ள வீட்டில் வசித்து வந்துள்ளனர். கொள்ளை நோக்கத்துடன் வீட்டுக்குள் நுழைந்த எவராவது இவர்களைக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த தம்பதியின் பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குத் தொலைபேசியில் பலமுறை அழைத்தும் பதிலின்றி போனதால், அயலவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதையடுத்து, அருகிலுள்ள வர்த்தக ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர்கள் கடையைத் திறந்து பார்த்தபோதுதான், கணவனும் மனைவியும் வெட்டுக்காயங்களுடன் இறந்த நிலையில் கிடப்பதைக் கண்டு ஹட்டன் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர். பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர், மேலும் தடயவியல் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர