கொட்டும் மழையிலும் கொட்டிய குளவிகள்: 5 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி
பொகவந்தலாவ பகுதியில் உள்ள கெக்கஸ்வோல் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்கள் குழுவொன்று குளவி தாக்குதலுக்கு இலக்கான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை (14) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த ஐந்து பெண்கள் சிகிச்சைக்காக பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பொகவந்தலாவ பொலிஸ் அதிகாரி ஒருவர், தோட்டப்பகுதியில் பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது திடீரென குளவிகள் தாக்கியதாக தெரிவித்தார். இதன் காரணமாக சில பெண்கள் காயமடைந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் கூறினார்.
இதுகுறித்து பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சிகிச்சை பெற்று வரும் ஐந்து பெண்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என தெரிவித்தார். அவர்கள் தற்போது வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

