வெல்லப்போவது தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா? - மு.க.ஸ்டாலின் பேச்சு
திருவிடந்தையில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உற்சாக உரையாற்றினார். தேர்தல் களத்தில் திமுகதான் முன்னணி சக்தி என குறிப்பிட்ட அவர், இந்தத் தேர்தலில் குறைந்தது 2.50 கோடி வாக்குகள் பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்தார். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 50 வாக்குகளுக்காவது பொறுப்பேற்றால் வெற்றி நிச்சயம் என அவர் வலியுறுத்தினார்.
ஸ்டாலின் மகளிர் படை வீடு வீடாக சென்று பரப்புரை செய்ய உள்ளதாகவும், மாவட்டச் செயலர்கள் மட்டுமல்லாமல் அடிப்படை நிலைத் தொண்டர்களின் பங்களிப்பே வெற்றியை தீர்மானிக்கும் என்றும் கூறினார். ஒவ்வொரு வாக்காளரையும் குறைந்தது ஐந்து முறை சந்தித்து பேச வேண்டும் எனவும், தேர்தல் காலத்தில் மக்களே எஜமானர்கள் என்பதை மறக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினார்.
திராவிட மாடல் திட்டங்கள் மற்றும் ஆட்சியின் சாதனைகளை வீடு தோறும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், 2026 ஆம் ஆண்டில் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் இலக்கை அடைய ஒவ்வொரு வாக்கும் முக்கியம் எனவும் அவர் தெரிவித்தார். திமுக எனும் ஆலமரத்தின் வேர்களே வாக்குச்சாவடி முகவர்கள் எனக் கூறி, அவர்களின் பங்களிப்பை பாராட்டினார்.
“வெல்லப்போவது தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என்பதை இந்தத் தேர்தல் தீர்மானிக்கும். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக திமுகவை ஆதரிக்க வேண்டியது அவசியம்” என அவர் வலியுறுத்தினார். மேலும், வெறுப்பு அரசியலை தமிழகத்தில் இடம் பெற விடக்கூடாது என்றும், திமுக வெற்றியே தமிழ்நாட்டின் வெற்றி எனவும் அவர் உரையில் தெரிவித்தார்.

